ஒரு முதியவர் தனியாக வாழ்ந்தார். அவர் ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டின் முற்றத்தில் ஒரு அழகிய மலர்த் தோட்டம் இருந்தது. அந்த வீட்டுக்கு முன்னால் விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அங்கு சிறுவர்கள் தினமும் விளையாடுவதுண்டு. அவர்கள் அப்படி விளையாடும்போது பல சமயங்களில் அந்த முதியவரின் வீட்டு முற்றத்தில் பந்து விழுந்து அவருடைய தோட்டம் சேதமாகிவிடும். இதனால் அந்த முதியவர் அச்சிறுவர்களை மிகவும் வெறுத்தார். அவர்கள் விளையாடும்போது கூச்சலிட்டு அவர்களை அச்சப்படுத்தி விளையாடவிடாமல் தடுப்பார். அவர் படலையையும் பூட்டுவார். அந்தச் சிறு பிள்ளைகளை மைதானத்திலிருந்தே விரட்டிவிடுவார்.
ஒருநாள் அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் திருடன் ஒருவன் அந்த முதியவரின் வீட்டில் களவு செய்ய முற்பட்டான். மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அதனைக் கவனித்து, அந்தத் திருடனை அங்கிருந்து விரட்டினார்கள். அதேவேளை அந்த முதியவரும் வீடுவந்து சேர்ந்தார்.
சிறுவர்களைத் தனது வீட்டு முற்றத்தில் கண்டவுடன் மிகவும் கோபப்பட்டு “ஏன் இங்கு வந்தீர்கள்?” என்று கேட்டார். அவரது கடுமையான குரலைக் கேட்டதும் சிறுவர்கள் அமைதியாகவும் பயத்துடனும் நின்றார்கள்.
பின்னர் முதியவருக்கு நடந்தவற்றை மிகவும் விளக்கமாகச் சொன்னார்கள். உடனே முதியவர் மிகவும் அன்புடன் எல்லாச் சிறுவர்களையும் அணைத்து, நீங்கள் மிகவும் கெட்டிக்கார, துணிச்சலான நல்ல பிள்ளைகள் என்று அந்தச் சிறுவர்களின் உதவியைப் பாராட்டினார். இவ்வளவு காலமும் சிறுவர்களை விரட்டி அடித்ததை நினைத்து மனம் வருந்தி அச்சிறுவர்களிடம் மன்னிப்புக் கேட்டார். அன்றிலிருந்து பிள்ளைகளுடன் சேர்ந்து பந்து விளையாடி மிகவும் இரக்கமாக இருந்தார்.