பையிலே காசு இல்லாத போது
கையிலே பாசத்தோடு அலைந்தோம்
பையிலே காசு வந்த போது
மனத்திலே கனத்தோடு நடக்கிறோம்
சட்டியில் சோறு குழைத்து
கையில் ஏந்தி உண்ட நாம்
சிறு சட்டிகளாய் பிரிந்து சோறு
இருந்தும் உண்ணாது தவிக்கிறோம்
ஒரு வீட்டில் ஒரு பாயில்
ஒரு போர்வைக்குள் உறங்கிய நாம்
தனி வீடு தனி அறை தனிப் படுக்கை
என்றாகிப் பிரிந்து உறக்கம் தேடுகிறோம்
தேசியம் தேடி ஓடிய நாளில்
சாவும் சகதியும் அருகருகில்
யார் பிணம் என்றும் அறியாது புதைத்தோம்
சாதி இரண்டு என்றாகி நின்றோம்
கூடிக் குடித்தோம் கஞ்சி
கூடிப் படுத்தோம் தரை விரிப்பில்
கூடி நின்றோம் முள்வேலியினுள்
இன்று….
பிச்சுப் போட்ட
ரொட்டித் துண்டுகளாய்
பூஞ்சணம் பிடித்து கிடக்கின்றோம்.
எதற்காக…?